சவுதியில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு தொழில் வழங்குவதையும் அவர்களுடன் நிதிசார் கொடுக்கல்வாங்கல்களை வைத்துக் கொள்வதையும் எச்சரித்து அந்நாட்டு உள்துறை மற்றும் தொழில் அமைச்சு தமது நாட்டு பிரஜைகளுக்கும் கம்பனிகளுக்கும் நிறுவனங்களுக்கும் தகவல் அனுப்பி வருகின்றது.
சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு புகலிடம் வழங்குவது சட்டவிரோதமானதும் தண்டனைக்குரிய குற்றமும் ஆகும் என்று அந்த சவுதி அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறு சட்டவிரோதமாக வேலை செய்வோர் தொடர்பாக பரிசோதிப்பதற்கென விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சவுதியில் சட்ட விரோதமாக தங்கியிருப்பவர்கள் தமது சொந்த நாடுகளுக்கு திரும்புவதற்காக நவம்பர் 03 ஆம் திகதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இது பொது மன்னிப்புக் காலமாக வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை தேடிப்பிடிப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதையும் மீறி சவுதியில் தங்கியிருப்பவர்ளுக்கு தொழில் வழங்குவதற்கும், புகலிடம் வழங்குவதற்கும் அவர்களை ஏற்றிச் செல்வதற்கும் துணைபுரிந்தால் அதற்காக இரண்டு வருட சிறைத் தண்டணையையும் ஒரு இலட்சம் சவுதி ரியால் அபராதமும் விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment